தங்க மீன்கள்

thanga meengal
நடிப்பு
ராம், சாதனா, ஷெல்லி கிஷோர்

பாடல்கள்
நா.முத்துக்குமார்

இசை
யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு
அர்பிந்து சாரா

திரைக்கதை, இயக்கம்
ராம்

தயாரிப்பு
கௌதம் மேனன், ரேஷ்மா கத்தாலா, வெங்கட் சோமசுந்தரம்

வெளீயீடு:
ஆகஸ்ட் 30, 2013

     மகள் மீது அதீத பாசம் கொண்ட தந்தை. மகளை அருகிலேயே இருக்க வேண்டும் என்பதற்காகவே குறைவான சம்பளத்தில் உள்ளூரில் கிடைக்கும் ஈயம் பூசும் வேலையைச் செய்கிறார் அப்பா கல்யாணி (ராம்).

     தந்தை மீதுள்ள அளவற்ற பாசம் காரணமாக, தந்தையின் பணப் பிரச்சினைகளுக்கு தானே காரணம் என்று நினைத்து குளத்தில் மூழ்கி தங்கமீனாய் மாறவும் தயாராகும் மகள் செல்லம்மா. இந்த இருவரின் வாழ்க்கை நிகழ்வுகள் தான் தங்க மீன்கள்.

     தனியார் பள்ளிகளின் கட்டணக் கொடுமை, அரசுப் பள்ளிகளின் மகத்துவம், அப்பா மகள் பாசம், ஏழைத் தந்தையின் பொருளாதார நெருக்கடி, என பல சமூக பிரச்னைகளின் ஊடே பயணிக்கிறது ராமின் திரைக்கதை.

     மகளை அளவு கடந்து நேசிக்கும் தந்தை ஏன் சிகரெட் புகைக்கிறார், மகளுக்கு எல்லையில்லா சுதந்தரம் கொடுத்து சுற்றவிடுகிறார் மற்றும் 2013ல் நடக்கும் கதையில், சம்பளம் மட்டும் ஏன் 1970களுக்கானதாக இருக்கிறது போன்ற நெருடல்கள் இல்லாமல் இல்லை.

     கல்யாணியாக வரும் ராமும், செல்லம்மாவாக வரும் பேபி சாதனாவும் அருமையாக நடித்திருக்கிறார்கள். ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோருக்கு வெகு இயல்பான வேடம். உணர்ந்து நடித்திருக்கிறார்.

     அருமையான இசை, நெகிழ வைக்கும் பாடல் வரிகள், கண்களை விட்டு அகல மறுக்கும் ஒளிப்பதிவு... யுவன் சங்கர் ராஜா, நா.முத்துக்குமார் மற்றும் அரபிந்து சாரா மூவரும் மெச்சும்படி உழைத்திருக்கிறார்கள்.

     இந்த படத்திற்கு மத்திய அரசு மூன்று தேசிய விருதுகளை வழங்கியுள்ளது.

1. மாநில மொழி பிரிவில் சிறந்த தமிழ்த் திரைப்படம்
2. சாதானாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது
3. ‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்’ பாடலுக்காக, நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியர் விருது

*****
பாடல்கள்
1. ஆனந்த யாழை மீட்டுகிறாய்
படம் : தங்கமீன்கள் (2013)
பாடியவர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசை : யுவன் சங்கர் ராஜா
இயற்றியவர் : நா. முத்துக்குமார்

வீடியோ


மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட,
உலகில் பாஷைகள் எதுவும் தேவை இல்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்,
மலையின் அழகோ தாங்கவில்லை.

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி...

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்தே பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி - அடி
கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி!

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே,
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!

அப்பா...
அதே...

உன் முகம் பார்த்தால் தோணுதடி,
வானத்து நிலவு சின்னதடி,
மேகத்தில் வரைந்தே பார்க்குதடி,
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி,

அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி!

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!