http://www.tamilthiraiulagam.com
திரை உலக தகவல்கள்

தமிழ் திரை உலகம்


புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன்


     எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் தாயும் மகனும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறினார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே அவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.

     1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், எம்.ஜி.ஆர். தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள் 135. இவற்றுள் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை 115.

     எம்.ஜி.ஆர். முதலில் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோயுற்று இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். இவரும் நோயுற்று இறந்து விட்டார். பின்னர் எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகியை மணந்து கொண்டார். துரதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.

     எம்.ஜி.ஆர். ஆரம்ப நாட்களில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், நேதாஜி பக்தராகவும் இருந்தார். பின்னர் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு நாட்களில் கலைஞர் கருணாநிதியுடன் கொண்ட நட்பால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பால் ஈர்க்கப்பட்டார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், முதலமைச்சராக பதவி ஏற்ற கலைஞர் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறினார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கினார். 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் இரண்டாம் முறையாக முதல்வரானார். 1984ல் இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்கு சிகிச்சை பெற அமெரிக்காவின் புருக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருக்கும் போதே தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். 1987ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்து பதவியிலிருக்கும் போதே 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

     இன்றளவும் எம்.ஜி.ஆர். அவர்கள் தாம் நடித்த திரைப்படங்களுக்காக மட்டுமின்றி, தம் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய பல மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்காகவும் மிகவும் போற்றப்படுகிறார். அவற்றுள் மிக முக்கியமானது பள்ளி மாணவர்களுக்காக அவர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டம் ஆகும். மேலும் ஈழ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமது இறுதிநாள் வரை பெரிதும் துணைநின்றார் எம்.ஜி.ஆர். அவர்கள்.




இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/actors/mgr.html

பதிப்புரிமை © 2007 தமிழ்திரைஉலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (13-05-2007 முதல்)
t shirts




Google




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 தமிழ்திரைஉலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.